இன்றைய காலகட்டத்தில் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பார்க்கப்படும் செய்திகளில் முதன்மையாய் இருப்பது இந்தக் காதலைப் பற்றிய செய்தியாகத்தான் இருக்கிறது. காதலர்கள் ஊரை விட்டு ஓடுவதும்,காதலித்து ஏமாற்றுவதும், கணவனிருக்க மனைவி கள்ளக்காதல் புரிவதும், மனைவியிருக்க கணவன் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதும், வயது வரம்புயின்றி வரும் வக்கிரக் காதலும் காதலால் ஏற்ப்படும் பாலியல் பலாத்காரமும், வன்புணர்வும், துயர நிகழ்வும்தான் அதிகம் வாசிக்கும்படியும் கேட்கும்படியுமாக உள்ளது.
ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் காதல் என்கிற வார்த்தையை கேட்டாலே கசப்பாகவும் அதை ஒரு கௌரவக் குறைச்சலாகவும் அவமானச் சொல்லாகவும் கருதினார்கள்.அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போய் இப்போதைய காலத்தில் காதல் பற்றி பேசுவதை கௌரவமாகக் கருதுவதுடன் சிறிதும் தயக்கமின்றி பெரியோர்கள் முன்பிலேயே சர்வசாதாரணமாக பேசிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதுதான் மிக வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.. அதாவது ஒருகாலத்தில் எதுவெல்லாம் வெட்கப்படக் கூடியதாக வெறுக்கத் தக்கதாக இருந்தனவோ அவைகளெல்லாம் இப்போது விரும்பத்தக்கதாக ஆகி வெளிச்சத்தில் நடைபெற ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இப்போதைய காலகட்டத்தில் வரும்காதலை பார்ப்போமேயானால் தூய்மையான உள்ளன்புடனும் நல்லெண்ணத்துடனும் யாரும் காதல் வயப்பட்டிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் கவர்ச்சிக்கும், மோகத்திற்க்கும், காசுபணத்திற்க்கும்,அற்ப ஆசைகளுக்கும் சொற்ப சுகங்களுக்கும் காதல் என்ற போர்வையில் தனது காம இச்சைகளை போக்கிக் கொள்ள ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த பல சம்பவங்களைச் சொல்லலாம். அதன் வரிசையில் முதலாவதாக...குடும்பம் மனைவி மக்கள் அரசு உயர்பதவியென சகலமும் பெற்று சந்தோசத்துடன் இருக்கும் ஒரு உயர் அதிகாரி கணவர் பிள்ளைகளுடன் வாழும் வேறுஒரு பெண் அதிகாரியை ஒருதலையாய் காதலித்து அந்தப் பெண் அதிகாரி இவருடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் இறுதியில் தற்க்கொலை செய்து கொண்டு பரிதாபமாக தனது முடிவை தேடிக்கொண்டுள்ளார். அடுத்தவர்கள் தப்புசெய்தால் அறிவுரை சொல்ல வேண்டிய ஒரு உயரதிகாரி அந்தத் தப்பை தானே செய்துள்ளார். தனக்கென்று ஒரு குடும்பம் இருப்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இந்த தரங்கெட்ட காதல் மனதில் வளருமா.??? அப்படியானால் இதை உண்மைக் காதல் என்று எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.
அடுத்த ஒரு ஜீரணிக்க முடியாத சம்பவம் அதுவும் நம் நாட்டில்தான் நடந்துள்ளது. பத்தும் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் அப்பள்ளி ஆசிரியைக்கும் காதல். பரிட்சையைக் கூட முழுமையாய் எழுதாமல் பாதியிலே விட்டுவிட்டு ஊரை விட்டு ஓட்டம்பிடித்துள்ளனர். ஆசிரியை என்பது அன்னைக்குச் சமமாகும்..அன்னையாய் இருந்து அறிவை போதிக்கவேண்டிய ஆசிரியையே இத்தகைய காரியத்தை செய்துள்ளார் என்றால் இதை என்னென்று சொல்வது..??? எப்படி இதுபோன்று நடந்துகொள்ள மனம் இடம் அளிக்கின்றது என்பதுதான் மிக யோசிக்கும்படியாக உள்ளது. இதில் யாரைக் குறைகூறுவது என்றுதான் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் இது ஏற்கத்தக்க செயலல்ல. இது ஒரு தவறான செயல் என்பதுகூடவா தெரியாமல் போய்விட்டது..???
இன்னொரு சம்பவம். இதுவும் சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தியேயாகும். .இருபது வயது வாலிபருடன் நாற்ப்பத்தி மூன்று வயது பெண் ஓட்டம். அந்த வாலிபன் பட்டம்பயிலும் கல்லூரி மாணவனாவான். அப்படியானால் இதுபோன்ற நடவடிக்கைள் காதல் என்கிற பெயரில் நடக்கும் காமலீலைகள் தானே.!?!?
இப்படியான சம்பவங்கள் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.ஆனாலும் சராசரியாக இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டும் இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டும் இருக்கத்தான் செய்கிறது.
மனித இனத்திற்கும் பிற இனத்திற்கும் உள்ள வித்தியாசமே பகுத்தறிவு ஒன்று மட்டும்தான்.. அதாவது சிந்தித்துச் செயல்படும் தன்மை மனித இனத்திற்கு மட்டும்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட தரமில்லா உறவுகளை வழிதவறிய பாதைகளை எப்படித் தேர்ந்தெடுக்க முடிகிறது.? அப்படியானால் மனிதன் இன்னும் பகுத்தறிவை முழுமையாக பெறவில்லையா.???
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தவறுகளை இனம்கண்டு அதை தவிர்த்து நடந்து கொள்பவன்தான் உண்மையான முழுமையான மனிதனாவான். நாம் இவ்வுலக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து மாண்டபின்னும் பிறர் மனதினில் நிற்கும்படியாக இருந்திட வேண்டும். அதைவிடுத்து இப்படியான அற்பசுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டோமேயானால்
ஆயுள்முழுக்க அவப்பெயரையும் அவமானத்தையும் நாம் சுமப்பதுடன் நமது குடும்பத்தினர்மத்தியிலும் தாய் தகப்பனார் மத்தியிலும், கணவன்,மனைவி மக்கள் மத்தியிலும் சமுதாயத்தினர் மத்தியிலும் மானமிழந்து,மரியாதை இழந்து நிம்மதியில்லாமல் ஒவ்வொரு நொடியும் உள்ளம் நொந்து வெட்கத்தில் கூனிக் குறுகி சிறுகச்சிறுக சித்திரவதையை அனுபவிக்கும்படி இருக்கும். இத்தகைய ஒரு அவமானம் தேவைதானா ..??? இதை தகாத உறவுக்காக காதலிக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நன்றி
:அதிரை மெய்சா
பெருகிவரும் காதல் கலாச்சாரமும், அதிர்ச்சிதரும் நிகழ்வுகளும் !?
Reviewed by Unknown
on
July 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
July 26, 2015
Rating:



No comments: