இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போல இவரும் கண்ணியமாக அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பணத்தை வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகள் சூடுபிடித்து வரும் சூழலில், வெளியுறவு அமைச்சரின் கடுமையான இந்த விமர்சனங்கள் வந்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ வெட்கமற்று பதவி வெறியின் காரணமாகவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதன் மூலம் மஹிந்த ராஜ்பக்ஷ தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் மங்கள சமரவீர கூறுகிறார்.
எனினும் அவர் தேர்தலில் போட்டியிடுவது மறைமுகமாக நல்லாட்சிக்கான ஐக்கியத் தேசிய முன்னணிக்கு அனுகூலமே எனவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் எதிர்கால நலன்களை மனதில் வைத்தே மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலுக்கு போட்டிடுகிறார் என மங்கள சமரவீர கூறும் கருத்தை, மஹிந்தவின் பேச்சாளர் ரோஹன வெலிவிட்டிய கடுமையாக மறுத்துள்ளார்.
அதேபோல மஹிந்த ராஜபக்ஷ மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் அவரது பேச்சாளர் புறந்தள்ளுகிறார்.
-BBC-
மஹிந்த பதவி வெறி பிடித்தவர்: மங்கள சமரவீர விமர்சனம்
Reviewed by Unknown
on
July 23, 2015
Rating:

No comments: