நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான குறிக்கோளாகும்.
‘உங்களுடைய பிரச்சினைக்கு எங்களுடைய தீர்வு’ என்ற தொனிப் பொருளில் இன்று கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படுகிறது.
எதிர்கால இலக்கைக் கொண்ட ஐவகைத் திட்டங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இன்று நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, ஐ.ம.சு.முவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
‘தேசத்தை உயிரூட்டுவோம், புதிதாக ஆரம்பிப்போம்’ என்ற தொனிப் பொருளில் ஐ.ம.சு.மு தேர்தல் விஞ்ஞாபனம் அமைய இருப்பதாக குறிப்பிட்ட அவர் விஞ்ஞாபனம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தது.
தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி பி.ப 3 மணிக்கு மருதனார்மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பில் வைத்து வெளியிடப்பட்டது. பிரதான ஐந்து அம்சங்களை முன்வைத்து இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐதேக தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு ஐமசுமு, ததேகூ அடுத்த வாரம்
Reviewed by Unknown
on
July 23, 2015
Rating:

No comments: