ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை இன்று(20) மேற்கொண்டிருந்தார்.
சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அது தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளமையால், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவித்த போதிலும், அவசர சிகிச்சைப் பிரிவை வழமை நிலைக்கு கொண்டுவரவில்லை எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர்.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரை 52 நோயாளர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப்பிரிவை வழமை நிலைக்கு கொண்டு வர உடனடியாக தலையீடு செய்யுமாறும், அதன் நடவடிக்கைகள் தொடர்பில் நாளாந்தம் கண்காணிக்குமாறும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மாகாண சபை காணியையும் வைத்தியசாலைக்கு சொந்தமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு சிகிச்சைபெறும் நோயாளர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், அவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடவும் மறக்கவில்லை.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவை கண்காணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
Reviewed by Unknown
on
July 22, 2015
Rating:

No comments: