கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையிலிருந்து, மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 2 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 9 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.
9 வீடுகளில் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாராங் கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருக்கின்றன.
மண்சரிவு அபாயத்தினால் குறித்த பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இடம்பெயர்ந்து இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.
அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு பணிகளின் போது பூண்டுலோயா மற்றும் கொத்மலை பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பொது மக்கள் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொத்மலை மண்சரிவு! 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி
Reviewed by Unknown
on
September 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 26, 2015
Rating:




No comments: