நீரில் மூழ்கும் கிராமங்கள்! மாதா கிராமம், பெரிய முறிப்பு, குஞ்சுக்குளம் கிராமங்களுக்கு செல்லும் தரைவழிப்பாதை துண்டிப்பு
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இதுவரை எவ்வித இடப் பெயர்வுகளும் ஏற்படவில்லை எனவும் தொடர்ச்சியாக மழை பெய்தால் இடப்பெயர்வுகள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில் பல பாகங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் பெரிய பண்டிவிருச்சான், கிழக்கு அமைதிபுரம் எனும் கிராமத்தில் அதிகளவான வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதாகவும், மடு பிரதேச செயலக பிரிவு அதிகாரிகள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வெள்ள நீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் குறித்த கிராமத்தில் உள்ள 40 குடும்பங்கள் பாதிப்புக்கள் இன்றி இருப்பதாக மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி தெரிவித்தார்.
அத்தோடு மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதாகிராமம், பெரிய முறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் செல்லும் தரை வழிப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த கிராமத்தின் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த 3 கிராமங்களைச் சேர்ந்த 230 குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருவாதாகவும் மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி தெரிவித்துள்ளார். மக்களுக்கு அங்கு எதுவித பாதிப்புக்கள் இல்லை எனவும் உலர் உணவு பொருட்கள் அங்கு போதியளவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கிராமங்களுக்குச் செல்லும் வீதி மற்றும் பாலத்தை மேவி மல்வத்து ஓய நீர் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரின் தாழ்வான கிராமங்கள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ள போதும் பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.
தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலையில் பாதிப்புக்கள் மற்றும் இடப் பெயர்வுகள் அதிகரிக்கும் என மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியின் பாலியாற்று பகுதியில் உள்ள பாலத்தை வெள்ள நீர் மேவிப்பாய்வதினால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து பாலியாறு வரை அரச தனியார் சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாலியாற்றைக் கடந்து சென்று பிரிதொரு வாகனத்தில் மக்கள் செல்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தலைமன்னார், சௌத்பார், சாந்திபுரம், எமிழ்நகர் போன்ற கிராமங்களிலும் அதிகலவான வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீரில் மூழ்கும் கிராமங்கள்! மாதா கிராமம், பெரிய முறிப்பு, குஞ்சுக்குளம் கிராமங்களுக்கு செல்லும் தரைவழிப்பாதை துண்டிப்பு
Reviewed by Unknown
on
November 15, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 15, 2015
Rating:



No comments: